அழகன் Azhagan
வெள்ளி, 8 மே, 2026
From Statesmanship to Strategy
திங்கள், 4 மே, 2026
'கர' - திரை விமர்சனம்
டீ குடிப்பது போல வங்கியை கொள்ளையடிப்பது அவ்வளவு எளிது.
பிடிபட்ட திருடன் மீது தீர்க்கப்படாத எல்லா வழக்குகளையும் சுமத்துவதுதான் போலீஸ் வேலை. சாட்சிகள் இங்கே தேடப்படுவதில்லை, 'உருவாக்கப்படுகின்றன'.
கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாரும் விவசாயத்தை விடாமல் அங்கேயே இருப்பவர்கள்.
வங்கியின் தொழில் பொது மக்களை ஏமாற்றுவது மட்டுமே.
தன் காதலன் திருடன் என்று தெரிந்தும், கண்ணை மூடிக்கொண்டு காதலித்துத் திருமணம் செய்வதுதான் கதாநாயகியின் ஒரே வேலை.
மனைவியைப் பொறுப்புடன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவளை விடுதியில் தனியாக விட்டுவிட்டு வருவதுதான் இந்தப் படத்தின் 'உன்னதமான' பொறுப்புணர்வு!
கதாநாயகன் மனம் மாற வேண்டும் என்பதற்காகவே தந்தை சென்டிமென்ட்டாக இறந்து போவார். இது தான் தந்தை பாசம்.
வங்கியின் மேலதிகாரியே கூலிப்படை வைத்துத் தன் வங்கியைக் கொள்ளையடிப்பார். இதுவே வில்லத்தனம்.
செய்தித்தாள் முதல் பக்கத்தில் இடம் பிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி சட்டத்திற்குப் புறம்பான எதை வேண்டுமானாலும் செய்வார்.
இதுதான் 'கர'.
ஒரு படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இப்படத்தை ஒரு பாடமாகவே வைக்கலாம்!
படம் நடைபெறும் அந்த காலகட்டம் (Period Setting) மட்டுமே ஓரளவிற்கு படத்தில் ஆறுதலான அம்சம்.
சனி, 2 மே, 2026
நம் வாக்கு ஒரு பொம்மையா? ஜனநாயகத்தை விளையாட்டுப் பொருளாக்கலாமா?
ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் திருவிழா என்று நினைத்தால் அது ஒரு மாபெரும் தவறு. ஜனநாயகம் என்பது நம் சமூகத்தின் எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கும் மிக உயரிய அதிகாரம்.
இன்றைய காலகட்டத்தில் வாக்களிப்பது என்பது உரிமை என்பதிலிருந்து விலகி, ஒரு வேடிக்கையான செயலாக மாற்றப்பட்டு வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது.
குறிப்பாக, அரசியல் அறிவோ அல்லது சமூகப் புரிதலோ இல்லாத சிறு வயதுக் குழந்தைகள் "ஏதாவது சாப்பிட வேண்டும்" அல்லது "விளையாட வேண்டும்" என்று கேட்பதைப் போல, அவர்களின் விருப்பத்திற்காகப் பெற்றோர்கள் வாக்களிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணம்.
வாக்கு என்பது ஒரு சிறு குழந்ததையின் விளையாட்டுப் பொம்மையா?
சிறு குழந்தைகளுக்குப் பசி எடுத்தால் உணவு பிடிக்கும், விளையாட அழகான பொம்மைகள் பிடிக்கும். ஆனால், ஒரு நாட்டின் பொருளாதாரம், சட்டம், மற்றும் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சிக்காகவோ அல்லது அவர்களின் பிடிவாதத்திற்காகவோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பது என்பது, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒரு குழந்தையிடம் ஒப்படைப்பதற்குச் சமம்.
வாக்களிப்பது என்பது "சாக்லேட்" வாங்குவது போன்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் அல்ல. அது உங்கள் குழந்தையின் அடுத்த 20 ஆண்டுகால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆவணம்.
ஜனநாயகத்தின் வலிமை எதில் உள்ளது?
ஒரு ஜனநாயகம் எப்போது வலுவடைகிறது என்றால், வாக்காளர் ஒவ்வொருவரும் சுய அறிவோடும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கும்போதுதான்.
தகுதியானத் தலைமை: கொள்கைகளை ஆராய்ந்து வாக்களிக்கும்போதுதான் தகுதியானவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள்.
கேள்வி கேட்கும் உரிமை: நாம் சிந்தித்து வாக்களித்தால் மட்டுமே, ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது அவர்களைத் தட்டிக் கேட்கும் தார்மீக உரிமை நமக்கு இருக்கும்.
குழந்தைகளின் விருப்பத்திற்காக வாக்களிக்கும்போது, அங்கே "சிந்தனை" மறைந்து "உணர்ச்சி" மேலோங்குகிறது. இது ஜனநாயகத்தின் வேரையே அரித்துவிடும்.
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நீங்களே சிதைக்கிறீர்கள்
"என் குழந்தை ஆசைப்படுகிறான் / ஆசைப்படுகிறாள்" என்பதற்காக நீங்கள் அளிக்கும் ஒரு தவறான வாக்கு, உண்மையில் அந்தச் சிறுவன் அல்லது சிறுமியின் எதிர்காலத்தையே சிதைக்கும் செயலாக முடியும்.
வாய்ப்புகள் பறிபோதல்: தரமற்ற கல்விமுறை அல்லது வேலைவாய்ப்பற்ற சூழலை உருவாக்கும் ஒரு கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால், உங்கள் குழந்தை வளர்ந்து வரும்போது அவர்களுக்குத் தகுதியான வாழ்க்கை கிடைக்காமல் போகும்.
கடனாளியாகும் தலைமுறை: தற்காலிகமான, கவர்ச்சிகரமான நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகளுக்காகவோ வாக்களிப்பது, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும். அதன் விளைவாக ஏற்படும் கடன் சுமையை உங்கள் குழந்தைதான் சுமக்க வேண்டியிருக்கும்.
பொறுப்பற்றத் தலைமை: அரசியல்வாதிகள் "மக்களை எளிதாக ஏமாற்றிவிடலாம், உணர்ச்சிகளைத் தூண்டினால் போதும்" என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். இது தரமான ஆளுமைகள் அரசியலுக்கு வருவதைத் தடுத்துவிடும்.
நல்லாட்சி வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் நல்லாட்சியை எதிர்பார்க்கிறோம், ஆனால் அதற்கான விலையைத் தரத் தயாராக இருக்கிறோமா? நல்லாட்சி என்பது தானாக வராது; அது விழிப்புணர்வுள்ள வாக்காளர்களால் உருவாக்கப்படுவது.
கொள்கையே பிரதானம்: சாதி, மதம் அல்லது தனிநபர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் கடந்தகாலச் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும்.
தர்க்க ரீதியான முடிவு: ஒரு கட்சியின் திட்டம் அடுத்த தலைமுறைக்கு என்ன நன்மைகளைச் செய்யும் என்பதை ஆராய வேண்டும்.
பெற்றோரின் கடமை: உங்கள் குழந்தைக்கு இன்று ஒரு பொம்மையை வாங்கிக் கொடுப்பதை விட, அவன் வளர்ந்து வாழப் போகும் இந்தச் சமூகம் பாதுகாப்பானதாகவும், நேர்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதே ஒரு பெற்றோராக நீங்கள் செய்யும் ஆகச்சிறந்த அறம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
- சிலப்பதிகாரம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான எச்சரிக்கை. இங்கு, வாக்காளர்களே அதிகாரத்தில் இருப்பவர்கள். தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்கள். ஒரு நாட்டின் தலையெழுத்தை வடிவமைக்கும் அந்த உரிமையை, வெறும் விளையாட்டுப் போலவோ அல்லது குழந்தைகளின் தற்காலிக ஆசைக்காகவோ தவறாகப் பயன்படுத்தினால், அதன் விளைவு முதலில் வாக்களித்த வாக்காளர்களையே பாதிக்கும். சிந்திக்காமல் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நமது ஜனநாயகத்தின் வலிமையைச் சிதைத்து, நம் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையே கேள்விக்குறியாக்கிவிடும்.
வாக்களிப்பது என்பது குழந்தைகளின் விளையாட்டு (Child's Play) அல்ல. அது ஒரு பொறுப்பு. சிற குழந்தைக்குத் தன் எதிர்காலத்தைப் பற்றித் தெரியாது, ஆனால் ஒரு பெற்றோராக உங்களுக்குத் தெரியும்.
குழந்தைகளின் தற்காலிகமான ஆசைக்காக உங்கள் வாக்கை விற்காதீர்கள். உங்கள் குழந்தையின் கைகளில் ஒரு பொம்மையைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கான ஒரு நல்ல சமூகத்தை உங்கள் வாக்கின் மூலம் பரிசளியுங்கள். சிந்திக்காமல் அளிக்கப்படும் வாக்கு, ஜனநாயகத்தைக் கொல்வது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் எதிர்காலத்தையும் இருளாக்கிவிடும்.
நல்லாட்சி என்பது உங்கள் விழிப்புணர்வில் தொடங்கும் ஒரு பயணம்.
வெள்ளி, 24 ஏப்ரல், 2026
மக்களுக்கா?
அரசுப் பேருந்து
மக்களுக்காக
மக்களைச் சுமந்து கொண்டு
டோல்கேட் -
கதவுகள் திறக்கப்படவில்லை
பாஸ்டேக்கில்
பணமில்லையாம்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
நீதிபதிகள்
.........
செல்கிறார்கள்
இலவசமாய்
ஆனால்...
மக்களுக்கான
மக்கள் பேருந்துக்கு
வேண்டுமாம் பணம்
பாதிப்பு? -
மக்களுக்கு மட்டுமே
வாழ்க
மக்களாட்சி
செவ்வாய், 21 ஏப்ரல், 2026
வீடு… அமைதி?
வீடாம் வீடு
நம் வீடு
பாதுகாப்பாய்
தங்கிடவும்
மகிழ்ச்சியாய்
மகிழ்ந்திடவும்
உடல் நலமாய்
வாழ்ந்திடவும்
மனம் நலமாய்
வாழ்ந்திடவும்
மரங்கள் சூழ
இருந்திடும்
வீடாம் வீடு
நம் வீடு
கோயில் இல்லா
ஊரில் குடியிருக்க
வேண்டாம்
என்ற ஒளவை
சொல்லுக்கிணங்க
இருக்கும்
வீடாம் வீடு
நம் வீடு
அதிகாலையில்
காட்டுக் கத்தும்
ஒலிபெருக்கியில்
அனைவர் தூக்கம்
கலைத்திடுமாம்
பள்ளிவாசல்
தொடரும்
பேரொலி
சர்ச்சுகளும்
கோவில்களுமே
போட்டி போட்டுக் கொண்டே
உள்ள நலமும்
கெட்டதாம்
உடல் நலமும்
கெட்டதாம்
மகிழ்ச்சியுதாம்
தொலைந்ததாம்
பாதுகாப்பும்
காணாமல் போனதாம்
அறிவிற் சிறந்த
ஒளவை வாக்கும்
பொய்யாய் போனதாம்
திங்கள், 13 ஏப்ரல், 2026
ரயில் நிலையம்… மக்களுக்கா?
ரயில் நிலையம்
ரயிலைப் போல
மிகப் பெரியதாய்
பல வழிகள்
மக்கள் -
உள்ளே செல்லவும்
வெளியே போகவும்
நவீனம்
என்ற பெயரில்
வழிகள் அடைத்து
அடிப்படைத் தேவைகள்
தவிர்த்து
அழகுபடுத்தி
மக்களுக்கான
இடங்களை ஆக்கிரமித்து
கட் அவுட்கள் வைத்து
மக்களுக்கான
ரயில் நிலையம் -
மக்களைப்
புறக்கணித்ததே
யாருக்கான நிலையம்?
பேரூந்து நிலையம் -
கடைகளாய்
கோவில்களாய்
அவற்றின் ஆக்கிரமிப்புகளாய் ...
பேருந்துகள்?
மக்கள்?