வெள்ளி, 3 ஏப்ரல், 2026

தேர்தல்

ரோட்டில்
காரில் செல்லவதே
குற்றம் என

மக்கள்
என் அடிமைகள்

அவர்களுக்கு ஏன்
மரியாதை என

மரியாதையின்றி
விசாரிக்கும்
அதிகார வர்க்கம்

சாமாணிய மக்கள் 
கொண்டு செல்லும்
சில லட்சங்களைப்
பறிமுதல் செய்து
தேர்தல் பட்டுவாடாவை
தடுத்து நிறுத்திவிட்டேன் 
என்று மார்தட்டும்
அதிகார வர்க்கம்

இதுவல்லவோ
மக்கள் வதை பார்க்காமல்
அதிகாரமே நம் தோழர்கள்
என இச்செய்தியை
சிறப்பாய் வெளியிடும்
பத்திரிக்கைகள்.

மக்களுக்கு துணை
செத்துவிட்ட
மக்களாட்சி மட்டும்.

அதிகாரம்

அதிகாரம்
என்ன செய்யும் -

அத்துமீறும்

துன்புறுத்தும்

தவறு செய்யும்

உரிமை மீறும்

கொடுமைப் படுத்தும்

செய்ய வேண்டியதைக்
தவிர்த்து ...

அனைத்தையும்
செய்யும்.

விதைத்தது தான் விளையும்

பள்ளிக்கூடம்
என்ன செய்யும்?

கற்றுக் கொடுக்கும்.

எதை?

குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.

ஊரில்
ஒரு பள்ளிக்கூடம்

பள்ளிக்கு
செயல்படும் நேரம் 
உண்டு

பள்ளி
செயல்படும்!

குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.

பள்ளி வாகனம் -

குழந்தைகளை
நாள்தோறும்
பள்ளி ஆரம்பிக்கும் 
வேளை தாண்டியும்
கொண்டு வந்து சேர்க்கும்

ரோட்டில்
நிறுத்தப்படும்
போக்குவரத்துக்கு
இடையூறாக

இடையூறு என்றால் —
மிரட்டி, விரட்டும்
ஆசிரியர்கள்.

பள்ளிவேளை 
முடியும் முன்னே
குழந்தைகளை
நாள்தோறும்
வீட்டுக்கும் 
கொண்டு போய் சேர்க்கும்.

குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.

விதை ஒன்றை 
விதைத்து விட்டு...

விளையும்
எனக் காத்திருக்கும்...

விளையும் -

நல்லது?

சிந்திக்காதே

சிந்தியாது இரு 
மனமே

அறியாமையே 
ஆனந்தம்

அறியாமையே 
பேரின்பம்

சிந்தியாது இரு 
மனமே

மாற்றங்களை 
உருவாக்குவது 
நீ அல்ல

மாற்றங்கள் 
உன்னை கேட்டு   
மாறுவது அல்ல

சிந்தியாது இரு 
மனமே

மாற்றம்
நீ அல்ல 

வாழ்க்கை 
வாழ்வதற்கே

சிந்தியாது இரு 
மனமே

அதுவே 
அமைதி

அதுவே 
சாந்தம்

என்றும்  
யாருக்கோ
அடிமையாய்

சிந்தியாது இரு 
மனமே

வியாழன், 2 ஏப்ரல், 2026

ஆக்கிரமி

தன் இருப்பை
காண்பிக்க

ஆக்கிரமி -

ஒலியால்
ஒளியால்
இடங்களை

ஆக்கிரமித்தல் ஒன்றே —

உன்னை 
மறக்கச் செய்யாது,
உன்னை 
நினைவில் நிறுத்தும்.

நீ
மனிதன்

மனிதனாய்
இருக்காதே

மனித தன்மை
இழ

ஆக்கிரமி

போதித்தது -

மதம்.

திருட்டு — திருட்டுதான்

திருடுவது
என்றான பின்

யாரிடமிருந்து
எதை, எப்போது, எவ்வளவு
என்பதில் என்ன
பொருள்
இருந்து விடப்
போகிறது.

திருடுவதே
தவறு

எதை, எப்போது, எவ்வளவு
என்ன
மாற்றத்தைப்
தந்து விடப்
போகிறது.

திங்கள், 30 மார்ச், 2026

தமிழக அரசியல் மாற்றமா அல்லது ஒரு மாயையா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கும் வாக்கு ஏன் மக்களாட்சிக்கு எதிரானது?

நமக்குத் தேவையானது மக்களாட்சி; மன்னராட்சி அல்ல!

தமிழக அரசியல் களம் இன்று ஒரு பெரும் திருப்புமுனையில் நிற்கிறது. புதிய முகங்கள், புதிய கட்சிகள்—இவை எல்லாம் மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்லப்படுகின்றன. ஆனால், நாம் ஒரு கேள்வியை முன்னிறுத்த வேண்டும்: இது மாற்றமா, அல்லது வெறும் மாயையா?

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அலை போலக் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரசிகனாக ரசிப்பதற்கும், குடிமகனாக வாக்களிப்பதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கறது. அந்த வித்தியாசத்தை நாம் அனைவரும் உணர வேண்டும்.

1. சினிமா கைதட்டல் – நிஜ வாழ்க்கைத் தீர்வா?

வெள்ளித்திரையில் கதாநாயகன் ஒரே வசனத்தில் உலகத்தையே மாற்றிவிடுவார். அந்த வினாடி வெளிப்படும் கைதட்டல்கள் ஆரவாரமானவை; ஆனால், நிஜ அரசியல் என்பது ஒரு காட்சியல்ல, அது பல கோடி மக்களின் வாழ்வாதாரம்.

பள்ளிகள், மருத்துவமனைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு—இவை வெறும் வசனங்களால் தீர்க்கப்பட வேண்டியவை அல்ல; தீர்க்கக்கூடியவையும் அல்ல. திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வால் மட்டுமே இவை சாத்தியம். கைதட்டல்களுக்கும், நிஜ நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதே ஒரு வாக்காளனின் முதல் கடமை.

2. 'தலைவர்' என்பவன் கடவுளா?

ஒரு தலைவரை நாம் மதிக்கலாம்; ஆனால் அவரை 'கேள்விக்கு அப்பாற்பட்டவர்' என்று கருதுவது மக்களாட்சிக்கு சவக்குழி.

மன்னராட்சியில் மன்னரின் சொல் வேதவாக்கு; ஆனால் மக்களாட்சியில் மக்களின் கேள்வியே இறுதித் தீர்ப்பு.

எங்கு ஒரு தலைவர் தனது செயலை நியாயப்படுத்தக் கடமைப்பட்டவர் இல்லையோ, அங்கு மக்களாட்சி மரணிக்கிறது. தலைவர் என்பவர் தவறே செய்யாத கடவுள் அல்ல; தவறு செய்தால் தட்டிக்கேட்கப்படும் ஒரு பிரதிநிதி மட்டுமே.

3. ரசிகர் கூட்டமா? விழிப்புணர்வுள்ள குடிமக்களா?

இன்று விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளத் துப்பில்லாத அரசியல் சூழலில், ரசிகர் மன்றங்களின் அடிப்டையில் ஒரு கட்சி உருவாவது ஆபத்தானது. ரசிகன் "என் தலைவர் தவறே செய்யமாட்டான்" என்று கண்மூடித்தனமாக நம்புவான்; ஆனால், குடிமகன் "என் தலைவர் தவறு செய்தால் தட்டிக்கேட்பேன்" என்று உறுதி கொள்வான். தமிழகத்திற்குத் தேவை ரசிகர் பட்டாளம் அல்ல; தகுதியை ஆராயும் அறிவுப்பூர்வமான வாக்காளர்கள்.

4. ஆள்பவர்களா? அல்லது பிரதிநிதிகளா?

மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்:

மன்னராட்சி: அதிகாரம் மேலிருந்து கீழே பாயும்; மக்கள் அடிபணிந்து கிடக்க வேண்டும்.

மக்களாட்சி: அதிகாரம் மக்களிலிருந்து மேலே செல்லும்; ஆள்பவர்கள் மக்களுக்கான வேலையாட்கள் (Representatives).

நாம் தேர்ந்தெடுப்பது நம்மை ஆளும் மன்னர்களை அல்ல; நம்முடைய குரலைப் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டிய பிரதிநிதிகளை. நாம் ஆளப்படும் பொருட்கள் அல்ல; ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் எஜமானர்கள்!

புத்தகத்தின் அட்டைக்கு மயங்காதீர்கள்!

அழகான புத்தகத்தின் அட்டையைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அதன் உள்ளே இருக்கும் கதையின் தரம் தான் முக்கியம்.

சினிமா புகழ் என்பது கவர்ச்சிகரமான அட்டை; ஆனால் கொள்கை என்பது உள்ளே இருக்கும் வீரியமான கதை.

சினிமாப் புகழால் வரும் போதையைத் தள்ளி வைத்துவிட்டு, சிந்திக்கும் திறனைத் தீட்டுங்கள்.

சிந்திப்போம்!

கேள்விகள் கேட்போம்!

செயல்படுவோம்!

கேள்விகளே மக்களாட்சியின் சுவாசக் காற்று!

நாம் தேடுவது மன்னராட்சி அல்ல — மக்கள் நலன் காக்கும் உண்மையான மக்களாட்சி!

மக்களாட்சி மலர ஓட்டு போடுவோம்.

வெல்லட்டும் மக்களாட்சி