திங்கள், 30 மார்ச், 2026

தமிழக அரசியல் மாற்றமா அல்லது ஒரு மாயையா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கும் வாக்கு ஏன் மக்களாட்சிக்கு எதிரானது?

நமக்குத் தேவையானது மக்களாட்சி; மன்னராட்சி அல்ல!

தமிழக அரசியல் களம் இன்று ஒரு பெரும் திருப்புமுனையில் நிற்கிறது. புதிய முகங்கள், புதிய கட்சிகள்—இவை எல்லாம் மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்லப்படுகின்றன. ஆனால், நாம் ஒரு கேள்வியை முன்னிறுத்த வேண்டும்: இது மாற்றமா, அல்லது வெறும் மாயையா?

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அலை போலக் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரசிகனாக ரசிப்பதற்கும், குடிமகனாக வாக்களிப்பதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கறது. அந்த வித்தியாசத்தை நாம் அனைவரும் உணர வேண்டும்.

1. சினிமா கைதட்டல் – நிஜ வாழ்க்கைத் தீர்வா?

வெள்ளித்திரையில் கதாநாயகன் ஒரே வசனத்தில் உலகத்தையே மாற்றிவிடுவார். அந்த வினாடி வெளிப்படும் கைதட்டல்கள் ஆரவாரமானவை; ஆனால், நிஜ அரசியல் என்பது ஒரு காட்சியல்ல, அது பல கோடி மக்களின் வாழ்வாதாரம்.

பள்ளிகள், மருத்துவமனைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு—இவை வெறும் வசனங்களால் தீர்க்கப்பட வேண்டியவை அல்ல; தீர்க்கக்கூடியவையும் அல்ல. திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வால் மட்டுமே இவை சாத்தியம். கைதட்டல்களுக்கும், நிஜ நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதே ஒரு வாக்காளனின் முதல் கடமை.

2. 'தலைவர்' என்பவன் கடவுளா?

ஒரு தலைவரை நாம் மதிக்கலாம்; ஆனால் அவரை 'கேள்விக்கு அப்பாற்பட்டவர்' என்று கருதுவது மக்களாட்சிக்கு சவக்குழி.

மன்னராட்சியில் மன்னரின் சொல் வேதவாக்கு; ஆனால் மக்களாட்சியில் மக்களின் கேள்வியே இறுதித் தீர்ப்பு.

எங்கு ஒரு தலைவர் தனது செயலை நியாயப்படுத்தக் கடமைப்பட்டவர் இல்லையோ, அங்கு மக்களாட்சி மரணிக்கிறது. தலைவர் என்பவர் தவறே செய்யாத கடவுள் அல்ல; தவறு செய்தால் தட்டிக்கேட்கப்படும் ஒரு பிரதிநிதி மட்டுமே.

3. ரசிகர் கூட்டமா? விழிப்புணர்வுள்ள குடிமக்களா?

இன்று விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளத் துப்பில்லாத அரசியல் சூழலில், ரசிகர் மன்றங்களின் அடிப்டையில் ஒரு கட்சி உருவாவது ஆபத்தானது. ரசிகன் "என் தலைவர் தவறே செய்யமாட்டான்" என்று கண்மூடித்தனமாக நம்புவான்; ஆனால், குடிமகன் "என் தலைவர் தவறு செய்தால் தட்டிக்கேட்பேன்" என்று உறுதி கொள்வான். தமிழகத்திற்குத் தேவை ரசிகர் பட்டாளம் அல்ல; தகுதியை ஆராயும் அறிவுப்பூர்வமான வாக்காளர்கள்.

4. ஆள்பவர்களா? அல்லது பிரதிநிதிகளா?

மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்:

மன்னராட்சி: அதிகாரம் மேலிருந்து கீழே பாயும்; மக்கள் அடிபணிந்து கிடக்க வேண்டும்.

மக்களாட்சி: அதிகாரம் மக்களிலிருந்து மேலே செல்லும்; ஆள்பவர்கள் மக்களுக்கான வேலையாட்கள் (Representatives).

நாம் தேர்ந்தெடுப்பது நம்மை ஆளும் மன்னர்களை அல்ல; நம்முடைய குரலைப் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டிய பிரதிநிதிகளை. நாம் ஆளப்படும் பொருட்கள் அல்ல; ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் எஜமானர்கள்!

புத்தகத்தின் அட்டைக்கு மயங்காதீர்கள்!

அழகான புத்தகத்தின் அட்டையைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அதன் உள்ளே இருக்கும் கதையின் தரம் தான் முக்கியம்.

சினிமா புகழ் என்பது கவர்ச்சிகரமான அட்டை; ஆனால் கொள்கை என்பது உள்ளே இருக்கும் வீரியமான கதை.

சினிமாப் புகழால் வரும் போதையைத் தள்ளி வைத்துவிட்டு, சிந்திக்கும் திறனைத் தீட்டுங்கள்.

சிந்திப்போம்!

கேள்விகள் கேட்போம்!

செயல்படுவோம்!

கேள்விகளே மக்களாட்சியின் சுவாசக் காற்று!

நாம் தேடுவது மன்னராட்சி அல்ல — மக்கள் நலன் காக்கும் உண்மையான மக்களாட்சி!

மக்களாட்சி மலர ஓட்டு போடுவோம்.

வெல்லட்டும் மக்களாட்சி

ஞாயிறு, 29 மார்ச், 2026

ஒரு விளம்பரம் - ஒருவழிப் பாதை: அத்துமீறலும் திமிரும்...

சமீபத்தில் சக்ரா கோல்டு டீ விளம்பரம் என்  கவனத்தை ஈர்த்தது. அழகான யதார்த்தமான விளம்பரம். ஒருவழிப் பாதையில் 'ராங் ரூட்டில்' (Wrong Side) திமிருடன் கார் ஓட்டி வரும் ஒரு நபர், சரியாக வரும் பெண்ணை வழிவிடுமாறு மிரட்டுவார்.
ஆனால், அந்தப் பெண் பணியாமல் உறுதியாக நின்று, தவறு செய்தவரையே பின்னோக்கிச் செல்ல வைப்பார்.

​இந்தக் காட்சி வெறும் விளம்பரமல்ல — நம் அன்றாடச் சாலைப் போரின் கசப்பான உண்மை. விளம்பரம் காட்டும் உண்மை; விளம்பரம் சொல்லும் அவலம்​ நம் வாழ்க்கையில், இதுபோன்ற சூழல்களை நாம் நாள்தோறும் சந்திக்கிறோம். ஆனால், அங்கே நடப்பதோ தலைகீழ். தவறு செய்பவர்களே "உரிமையோடு" கோபப்படுகிறார்கள்; சரியாகச் செல்வோர் சங்கடத்துடன் ஒதுங்கிச் செல்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களோ, "ஏதோ அட்ஜஸ்ட் செய்து போங்களேன்" என்று தர்ம உபதேசம் செய்கிறார்கள்.
இந்த 'அட்ஜஸ்ட்மென்ட்' கலாச்சாரம் தான், தவறு செய்பவர்களின் துணிச்சலைத் தூண்டுகிறது.

​ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் விதிமீறலா? இல்லை... குற்றவியல் நடவடிக்கை! ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் 'போக்குவரத்து விதிமிறல்' அல்ல; அது சக மனிதனின் உயிருக்குக் குறிவைக்கும் ஒரு குற்றவியல் நடவடிக்கை.

​பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ், இத்தகைய செயல்கள் இப்போது கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன: BNS பிரிவு 281 (முன்னைய IPC 279): பொதுப்பாதையில் அஜாக்கிரதையாக அல்லது அலட்சியமாக, மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்ட நடவடிக்கைகள்: இப்போது இது வெறும் அபராதத்துடன் முடிந்துவிடுவதில்லை. காவல்துறை அவர்கள் மீது FIR பதிவு செய்யலாம். இது ‘அபாயகரமான ஓட்டுதல்’ (Rash Driving) எனக் கருதப்படும். ​தண்டனை விவரம்: இக்குற்றத்திற்காக 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அல்லது 1,000 முதல் 5,000 வரை அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

​'பழக்கதோஷம்' எனும் உயிர்க்கொல்லி சட்டம் கடுமையாக இருந்தாலும், "கொஞ்சம் தூரம் தானே", "எப்போதும் இப்படித்தான் போவேன்" எனப் 'பழக்கதோஷம்' பேசும் கூட்டம் பெருகிவிட்டது. இவர்கள் சரியாகச் செல்வோரையே மிரட்டுவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் ஒருவித 'சாலை ரவுடித்தனம்'. இத்தகையவர்கள் செய்யும் இந்தச் சிறிய 'ஷார்ட்கட்' ஆசை, ஒட்டுமொத்தப் போக்குவரத்து ஒழுங்கையும் சீர்குலைத்து, பலரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், எரிச்சலையும் தருகிறது.

​மாற்றம் எங்கே தொடங்கும்? அந்த  விளம்பரத்தில் அந்தப் பெண் காட்டிய துணிச்சல், நம்முடைய வாழ்க்கையிலும் நம் ஒவ்வொருவருக்கும் தேவை. மாற்றம் என்பது தனிமனித ஒழுக்கத்தில் தொடங்க வேண்டும்: சாலை விதிகளைப் பின்பற்றுவது ஒரு சட்டக் கடமை மட்டுமல்ல, அது ஒரு மனிதநேயப் பண்பு. அது ஒரு சமூகச் கடமை. தவறு செய்பவர்களுக்கு வழிவிடுவதைத் தவிர்த்து, அவர்களைச் சட்டத்திற்குப் பணிய வைக்கும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.

​​ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தால் விபத்து ஏற்படாது. ஆனால் பொதுப்பாதையில் அஜாக்கிரதையாக அல்லது அலட்சியமாக, மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது - ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது, செல் போன் பேசிக் கொண்ட வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக  வாகனம் ஓட்டுவது, அதீத ஒலி ஏற்படுத்துவது போன்றவை விபத்து ஏற்பட வைக்கும்.

சாலை என்பது தனி மனிதனின் வசதிக்காக உருவாக்கப்பட்டதல்ல; அது அனைவரின் பயணத்திற்கானது. ஒருவழிப் பாதையில் தவறான திசையில் செல்லும் ஒவ்வொருவரும், ஒரு விதியை மட்டுமல்ல — மறற் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

​இனிமேல் சாலைகளில் “அட்ஜஸ்ட்” செய்ய வேண்டியது விதிமீறல்களுக்காக அல்ல  விதியை மீறத் துடிக்கும் நம் மனநிலைக்காகத்தான்!

சக்ரா கோல்டு டீ விளம்பரத்திற்கு பாராட்டுகள்.

வெள்ளி, 27 மார்ச், 2026

துறப்போம்! எதை வேண்டுமானாலும்

"மக்களே!
நாடு
மோசமான
கால கட்டத்தில்
உள்ளது

தியாகம் 
செய்யத்
தயராக இருங்கள்".

இது
தலைவர்

உடனே
கூட்டத்திலிருந்து
ஒரு குரல்
"இந்த 
ஒருமுறை மட்டும் 
நீங்கள் 
உங்கள் பதவிகளை 
தியாகம் செய்யுங்கள்.

அதுவும்
எங்களுக்காகவே.

நாங்கள் தானே
உங்கள்
உயிர்".

எனக் கேட்க
இருண்டது
தலைவரின் முகம்.

ஒரே… ஆனால் சமம் இல்லை

ஒரே நாடு 
ஒரே மொழி 
ஒரே தெய்வம்
ஒரே தேர்தல் 
ஒரே தலைவன்
எனக் கோஷமிடுவோர்களிடம்

மக்கள் எல்லாம்
ஒரே நிரை
என்று மட்டும்
ஏற்றுக்கொள்ள 
மறுப்பது ஏன்?

என்று நான் கேட்க

எங்கள்
வேதம்
சொல்கிறது ...

பிறப்பால்
நாங்கள்
உயர்ந்தவர்கள் !

முற்பிறவி
கர்மாவால்
நீங்கள்
எங்களுக்கு
ஈடாக மாட்டீர்கள்!

என 
மாற்றிப் பேசும்
சந்தர்ப்பவாதிகள்!

இவர்கள்
சமத்துவம் -

தெரிவு செய்த 
இடங்களில் மட்டுமே!

ஒலிபெருக்கியே பக்தி

நம் ஊரில்
பல்வேறு
தெய்வங்கள்

பல்வேறு
தெய்வங்களுக்கும் 

பற்பல 
கோயில்கள்

பற்பல
வழிப்பாட்டு
முறைகள்

பக்தர்கள்
எனப் பெயர் கொண்டு

பக்தி என்ற
குறிக்கொள் மறந்து

நானே
பெரியவன்

என் பெயரை
நிலைநாட்டுவேன்
என

ஊர் அதிர
ஒலிபெருக்கி அமைத்து

அத் தெய்வ
வழிப்பாட்டு முறை 
விட்டு விலகி

ஏதேதோ
தெய்வகளின் பாடல் -

வரிசை கூட தெரியாமல்

சத்தம்
ஒன்றே குறிக்கொளாய்

பூடம் தெரியாமல்
சாமியாடும் 
ஒலிபெருக்கி
பக்த'சாமிகள்'.

சொர்க்கம் தேடி நரகம்

சொர்க்கம்
செல்ல வேண்டி

உழைந்த காசையும்
நேரத்தையும்
வீணாக்கி

தெரியாத 
சொர்க்க
ஆசையில்

வாழும்
வாழ்க்கையை
நரகமாக்கும்
மாக்கள்.

பெரியார்

"மூட நம்பிக்கை
கொள்ளாதே"
யார் சொன்னார்கள்?

"சாமி
சொல்லிச்சு"

"கடவுள்
இல்லவே 
இல்லையாம்"
யார் சொன்னார்கள்?

"சாமி
சொல்லிச்சு"

"எந்தச் 
சாமி"

நம்ம
ராம'சாமி' —

பெரியார் தான்.