திங்கள், 31 ஆகஸ்ட், 2026

கோவில் ஒலிபெருக்கிகள்: பக்தியா? பொதுமக்களுக்கு இடையூறா?

நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் அல்லது உங்கள் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவர் உங்கள் காதுகளுக்குள் வந்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், உங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியுமா அல்லது வேலைதான் செய்ய முடியுமா? நீங்கள் அவர்களை என்ன செய்வீர்கள்? விரட்டியடித்து விடுவீர்கள் அல்லவா?
ஆனால், நம் நாட்டில் அது முடியாது. ஏனென்றால், அந்த காதில் வந்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது கோவில்களில் 'இறைவனுக்காகஓதும் மந்திரங்கள்' என்று சொல்லிக்கொண்டு, ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே நம் காதுகளையும் புண்ணாக்கி, நம் மனதையும் புண்ணாக்கி, நம்மையும் புண்ணாக்கி, நம்மைச் சீக்கிரமே சாகடிக்கச் செய்யும் கோவில்கள்
இதை எதிர்த்து நாம் சட்டத்தை நாடினோம் என்றால், சட்டமும் மௌனமாகிவிடுகிறது. அதிலும் கொடுமை என்னவென்றால், சட்டப்படி இந்தக் கோயில்கள் செய்வது எதுவுமே சட்டத்திற்கு உட்பட்டதல்ல; ஒலிக்கும் டெசிபல் அளவுகளும் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. ஆனாலும் சட்டமும் அவர்கள் பக்கம்! நம்மால் எதிர்த்தும் அவர்களிடம் பேச முடிவதில்லை; ஏனென்றால், கோயில்களை நடத்துபவர்கள் ரௌடிகளாகத்தான் இருக்கிறார்கள்.
நம் வாழ்வு சாவை நோக்கித்தான்; ஆனால், அந்தச் சாவை இந்தக் கோயில்கள் விரைவாக்கிக்கொண்டே இருக்கின்றன. வாழ்வதற்காகக் கட்டப்பட்ட கோவில்கள், சாக வைப்பதைத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றன.

சனி, 15 ஆகஸ்ட், 2026

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் - திரை விமர்சனம்

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஒரு விளையாட்டுப் பற்றிய படம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அது ஒரு தாய்-மகன் பாசப் படம் என்று நினைக்க வைத்து, இல்லை அது ஒரு உணர்வுப்பூர்வமான கதை என்று மாறி, காமெடி படம் என்று நம்மை நினைக்க வைத்து, குடும்ப உறவுப் படம் என்று மாறி, ரொமான்ஸ் படம் என்று மாறிய ஒரு சஸ்பென்ஸ் படம்.
சூர்யா அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகளை அதிகமும் கொடுக்காமல், குறைவாகவும் கொடுக்காமல் ஒரு மில்லிமீட்டர் கூடப் பிசகாமல் நடித்திருக்கிறார்.
சூர்யாவின் அலுவலகத்திலும் வீட்டிலும் இருப்பவர்களின் நடிப்பு மிக மிக இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பு அழகோ அழகு!
மமிதா பைஜு எவ்வாறு ஆட்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்பதை அவர் வீட்டிலும், அவர் படிக்கும் இடத்திலும், சூர்யாவின் அலுவலகத்திலும் வீட்டிலும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
மமிதா, ராதிகாவிடம் சூர்யாவைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லும்போதும், ராதிகாவை "அத்தை" என்று கூப்பிடும்போதும், உணர்ச்சிகளின் இயல்பான நடிப்பில் ராதிகாவா அல்லது மமிதா பைஜுவா என வியக்க வைக்கின்றனர்.
படம் சில இடங்களில் கருத்துகளைச் சொல்லும்போது ஏற்படும் ஒருவிதச் சலிப்பைக் கேமராவும் இசையும் நேர் செய்துவிடுகின்றன.
பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்', 'அழகன்' திரைப்படங்களில் வயது வித்தியாசம் கொண்ட காதல் தோல்வியுற்றதை, 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இயக்குநர் வெற்றி பெற வைத்துவிட்டார்.
சொன்னதில் ஏதோ ஒன்றை விட்ட குறை இருப்பது போல் தெரிகிறதே... ஆம், கதை! ஒரு பொழுதுபோக்குப் படம் பொழுதை அழகாகப் போக்குகிறது என்கிறபோது, இல்லாத கதையைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பக்திப் பரவசம்

பக்தி வேடம் கொண்டு
'ஒலி' பெருக்கி
அடுத்தவர் வீட்டினுள்
இரைச்சலாய்
அத்துமீறி நுழையும்
'பக்தி'மான்கள்

புதன், 29 ஜூலை, 2026

சத்தமே சாமி

ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்

போகும் வரும் வழியடைத்து
தெருவெங்கும் பந்தல்
தெருவை உடைத்து பாழாக்கி

தெருவடைத்து
வழியடைத்து

காட்டுக் கூச்சலாய்
ஒலி பெருக்கி பாடி

மக்கள்
உயிர் வாழ
கண் காது வாய் முடவைத்து

தனக்கென 
அம்மனும் 
கண் மூடிக்கொள்ள

சாதி மதமென
சட்டமும்
கண் மூடிக்கொள்ள

ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு...

செவ்வாய், 21 ஜூலை, 2026

பூ மாலை உனக்கு!

உன் சிலைக்கு
மாலை அணிவித்திட

கார்கள் கார்களாய்
ஒலி எழுப்பிக் கொண்டே
கூட்டம் கூட்டமாய் 
கூப்பாடு போட்டுக் கொண்டே
ஊரே அதிர
வேட்டுகள் வெடித்து

இடையூறு செய்து
அவர்கள்-
அவர்களை
விளம்பரப்படுத்த...

இதற்காகத்தானோ-
நீ 
பிறந்தாயோ
காமராசா!

ஞாயிறு, 5 ஜூலை, 2026

கட்டா குஸ்தி 2 - திரைவிமர்சனம்

பனம் பழம் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனை மரத்தில் விளையும், மிகுந்த சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும்.
​"காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக" 'கட்டா குஸ்தி 2' படம் முழுவதும் அமைந்திருக்கிறது. அப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே, நமக்குச் சுவையான பனம்பழம் போன்றதொரு நல்ல படம் கிடைத்திருக்கிறதே, அது மகிழ்ச்சி தானே!
​நாம் சிரித்துக்கொண்டே ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் இது. அதே சமயம், எவ்வித அலுப்பும் சலிப்பும் தட்டாமல், பல நல்ல கருத்துக்களை மிக அழகாக நமக்குக் சொல்கிறது.
​இப்படத்தின் ஆகச்சிறந்த பலமே, குழந்தை நட்சத்திரமாக வரும் சாரா தான். படத்திற்கு அவர்தான் 'பனை மரம்'.
​ஒரு சிறந்த ஆசிரியர் கதை சொல்லிப் பாடம் எடுப்பதைப் போல, இத்திரைப்படம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய், 23 ஜூன், 2026

மதக் கொலைகள்

கோயில்கள்
சர்ச்சுகள்
பள்ளிவாசல்கள்
ஒலிகள்

அதிகாலையில் இருந்து
இரவு வரை

ஒலி
உற்பத்தி நிலையங்களாய்

சட்டத்தின் எல்லைகளை
மீறியே
எப்போதும்

சட்டம் 
எங்களை 
என்ன செய்யும்
என்ற மிதப்பில்

நாள்தோறும்
சிறுகச் சிறுக
என்னைக் கொல்லும்

என் சாவை 
விரைவுபடுத்தும்
வழிபாட்டு இரைச்சல்கள்

சாவை நோக்கி
நான்...