சனி, 15 ஆகஸ்ட், 2026

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் - திரை விமர்சனம்

விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஒரு விளையாட்டுப் பற்றிய படம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அது ஒரு தாய்-மகன் பாசப் படம் என்று நினைக்க வைத்து, இல்லை அது ஒரு உணர்வுப்பூர்வமான கதை என்று மாறி, காமெடி படம் என்று நம்மை நினைக்க வைத்து, குடும்ப உறவுப் படம் என்று மாறி, ரொமான்ஸ் படம் என்று மாறிய ஒரு சஸ்பென்ஸ் படம்.
சூர்யா அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகளை அதிகமும் கொடுக்காமல், குறைவாகவும் கொடுக்காமல் ஒரு மில்லிமீட்டர் கூடப் பிசகாமல் நடித்திருக்கிறார்.
சூர்யாவின் அலுவலகத்திலும் வீட்டிலும் இருப்பவர்களின் நடிப்பு மிக மிக இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பு அழகோ அழகு!
மமிதா பைஜு எவ்வாறு ஆட்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்பதை அவர் வீட்டிலும், அவர் படிக்கும் இடத்திலும், சூர்யாவின் அலுவலகத்திலும் வீட்டிலும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
மமிதா, ராதிகாவிடம் சூர்யாவைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லும்போதும், ராதிகாவை "அத்தை" என்று கூப்பிடும்போதும், உணர்ச்சிகளின் இயல்பான நடிப்பில் ராதிகாவா அல்லது மமிதா பைஜுவா என வியக்க வைக்கின்றனர்.
படம் சில இடங்களில் கருத்துகளைச் சொல்லும்போது ஏற்படும் ஒருவிதச் சலிப்பைக் கேமராவும் இசையும் நேர் செய்துவிடுகின்றன.
பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்', 'அழகன்' திரைப்படங்களில் வயது வித்தியாசம் கொண்ட காதல் தோல்வியுற்றதை, 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இயக்குநர் வெற்றி பெற வைத்துவிட்டார்.
சொன்னதில் ஏதோ ஒன்றை விட்ட குறை இருப்பது போல் தெரிகிறதே... ஆம், கதை! ஒரு பொழுதுபோக்குப் படம் பொழுதை அழகாகப் போக்குகிறது என்கிறபோது, இல்லாத கதையைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக