Saturday, May 11, 2019

நாக்கை நீட்டு‍ - புத்தக விமர்சனம்

நாக்கை நீட்டு
சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்

ஆசிரியர் : மா ஜியான்
பதிப்பாளர்: அடையாளம்
பக்கங்கள் : 96
மொழிபெயர்ப்பாளர் : எதிராஜ் அகிலன்
ISBN: 9788177203035
வெளியிட்ட ஆண்டு : 2019
 
யதார்த்தம், புனைவு என இரு உலகத்திலும் மாறி மாறி கதைகள் பயணிக்கிறது. கதைகளின் உள்ளே பெண்ணை அழித்துவிட நினைக்கும் ஒவ்வொரு செயலிலும் ஆண் ஏமாறுவதும், மற்றொரு நாட்டை ஆதிக்கம் செலுத்துவது இரு நாடுகளுக்குமே கேடாக முடியும் என்பன பொதிந்து உள்ளன. கதைகளில் உள்ளே பொதிந்து வைத்திருக்கும் ஒவ்வொன்றையும் நாம் தெரிந்துகொள்ளும் பொழுது கதை மேலும் ஆழமாகச் செல்கிறது.

நாட்டை அடி‍மைப்படுத்துவதில், பெண்ணை அடிமைப்படுத்துவதில், பண்பாட்டை அழிப்பதில் விளையும் பேராபத்துகள் உருவகக் கதைகளாகவே சொல்லப்பட்டு இருக்கின்றன.‍ ஒரே சிந்தனையுடன் கதையில் இயைந்தால் மட்டுமே கதைகள் நம் மனதில் ஆட்படும். இல்லையென்றால் கதையுடனான நம் பயணம் தடைப்பட்டு விடும்.

ஒவ்வொரு கதையிலும் தன் தாய்நாட்டை விட்டு விலகி நிற்கும் அகதிகளின் வாழ்வினை, தங்கள் நாட்டிலேயே தங்களது‍ சுதந்திரத்தை இழந்து நிற்கும் சுதந்திர அடிமைகளை அப்படியே பெண்ணுடன் பொருத்தி எது புனைவு எது உண்மை என்பதனை அறிந்துகொள்ள அறிவினை துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறோம்.

ஒவ்வொரு கதையும் ஒரு குற்ற உணர்ச்சி அந்தக் குற்ற உணர்ச்சி பாலியல் காரணமான உண்டான குற்ற உணர்ச்சியாகவும், அதிலிருந்து விடுபட அல்லது மறைத்துவிட எடுக்கும் முயற்சியாகவும் சொல்லப்படுகிறது. முறை தவறிய பாலியல் உறவு தாய் நாட்டின் மீது கொண்ட ஏக்கமாகவும், தன் நாட்டை காப்பாற்ற முடியாத சுயபச்சதாபமாகவும், தன் நாட்டை தானே காட்டிக்கொடுத்த குற்ற உணர்ச்சியாகவும் வெளிப்படுகிறது.

நாடு, பெண், முறை தவறிய பாலியல் உறவு என எந்த உண்மைச் சம்பவங்களையும் இந்த கதையுடன் ஒட்டி வைத்துக்கொள்ள முடியும். தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் உருவங்களாகவே இருக்கிறது. எனவே பொருத்துதல் எளிதாகவே அமைந்து விடுகிறது.

தன் தாயுடன் உறவு கொண்டு ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து அந்தப் பெண்ணுடனும் உறவு கொள்கிறார். அந்தப் பெண் தன் அப்பா இவர் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவளிடம் நீ என் அம்மாவின் பெண் என்று சொல்கிறார் அதனால் அவளுக்கு ஏற்படும் குழப்பங்கள். இவை தன் நாட்டை ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பண்பாட்டு இழப்பையும் இங்கே முறை தவறிய பாலியில் உறவின் மூலமாக கதையைச் சொல்கிறார்.

புத்த மதத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும், அதை தங்களது பண்பாட்டிலிருந்து விலக்கி வைக்க எடுக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகளையும் ஒவ்வொரு முறையில் தங்களது தாய் நாட்டிலேயே தாங்கள் சுதந்திரத்தை இழந்து இருப்பதை அழகாய் வெளிப்படுத்துகிறார்.

ஒரு ராணுவ வீரன் தன் உடை மட்டும் இல்லை என்றால் அவளது இரு கணவர்களையும் கொன்று விடுவேன் என்று சொல்வது அநியாயத்திற்கு எதிராகக் கு‍ரல் கொடுக்க முடியாமல் இருந்து விட்டு அதற்கு ஒரு காரணம் தேடும் செயலாக நம் கண் முன்னே நிறுத்தப்படுகிறது.

கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றவனுக்கு நகரப் பண்பாட்டின் மீது உள்ள காதல். உடை விஷயத்தில் உள்ள மாறுதல்களை தான் உண்மையான வளர்ச்சி என்று நம்பும் எண்ணமும். பாலியல் ஆசைகள் நிறைவேற எளிதாய் அமையும் அனைத்தும் வளர்ச்சி என நம்பும் மனித வாழ்வின் உண்மையான முகம் பட்ட வெளிச்சமாக்கப்படுகிறது.

ஒவ்வொரு கதையிலும் திபெத் நாட்டின் இயற்கை எழிலின் வர்ணனைகளும் விவரணைகளும் வெகு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

புத்தகம் தடை செய்பட்டத்திற்குக் காரணம் கதைகளில் ஔிந்துள்ள உருவகங்கள் தானே தவிர அதில் வரும் பாலியல் சம்பவங்களோ அல்லது திபெத் மக்களைக் குறையாகச் சொல்லப்பட்டவையோ அல்ல. இக் கதைகளை நம் நாட்டில் தற்போதைய‍ நிகழ்வுகளுடன் இணைத்தும் பார்க்க முடியும்.

கதையின் பின்னுரையில் ஆசிரியர் சொல்லும் ஒரு சீன பழமொழி அனைத்து விதமான அடி‍மைத்தன முயற்சிகளும் இழப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பது திபெத் சீனா நாட்டிற்கு மட்டுமல்ல எல்லா நாட்டிற்கும் பொருந்துவது. இவற்றிக்கு மட்டுமல்ல அதிக்கம் செலுத்த நினைக்கும் ஒவ்வொரு செயலுக்குமே பொருந்தும்.

எது இணைந்திருக்கிறதோ, அது கடைசியில் சிதறுண்டும் போகும்;
எது சிதறுண்டி‍ருக்கிறதோ, அது இறுதியில் ஒன்றினையும்.


‘ஆதிக்கம் செலுத்துதல்’ என்று நம் மனதில் இருந்து என்று விலகிறதோ அன்று தான் புத்தர் உயிரோடு வருவார்.